திருப்பதி கோயில் மீது 2வது முறையாக பறந்த விமானம்: கிளம்பிய சர்ச்சை
திருப்பதி: ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறக்க தடை விதிக்க கோரிக்கை விடுத்த பின்னரும், 10 நாட்களில் 2 வது முறையாக விமானம் பறந்துள்ளதால் தேவஸ்தான நிர்வாக அதிகாரிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த வெங்கைய நாயுடு தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதேபோல் திருப்பதி கோயிலின் ஆகம பண்டிதர்களும் ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறப்பது ஆகம முறைக்கு புறம்பானது. எனவே மாநில அரசு ஏழுமலையான் கோயில் அமைந்திருக்கும் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.
சமீபத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜுவும், ‘விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்திருந்தார்.
எனினும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயில் கோபுரத்தின் மேலே விமானம் பறந்து சென்றது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் மீண்டும் விமானம் பறந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பாதுகாப்புக்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது என சாஸ்திர வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் கோபுரம் மேலே விமானங்கள் பறக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவஸ்தான நிர்வாகம், திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டாலும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, இந்த விவகாரம், விமான போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வராது.
ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளதால் ராணுவத்தினர் இதற்கு அனுமதி தந்தால் மட்டுமே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications