டிஜிட்டல் இந்தியாவுக்கு மாறுங்கள்... அரசின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துங்கள்.. மோடி
பொதுமக்கள் உற்பத்திப் பொருட்களை விற்கவும், சேவைகள் பற்றி நிதி உதவி பெறவும் அரசின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
டெல்லி: இந்தியாவில் பொதுமக்கள் தங்களின் உற்பத்திப் பொருட்கள், சேவைகளை வழங்க, ஆன்லைன் மூலம் நிதியுதவிகள் பெற அரசு இணையதளங்களை பயன்படுத்தும்படி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமராக பதவியேற்றது முதலாக, மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று, நாட்டு மக்களிடையே, மான் கீ பாத் என்ற தலைப்பில், நரேந்திர மோடி, பேசி வருகிறார். இந்த பேச்சு, ஆல் இந்தியா ரேடியோ மற்றும் டிடி தொலைக்காட்சியில் நேரலையாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதன்படி, இன்றைய மான் கீ பாத் உரையாடலை நிகழ்த்திய மோடி, இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் பண்டிகை வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். பின்னர், நாட்டு மக்கள் அனைவரும் விருந்தினரை சந்திக்க செல்லும்போது, பூங்கொத்து கொடுக்காமல், கர்சீப், புத்தகம் போன்ற பயனுள்ள பொருட்களை கொடுத்து வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும் என, மோடி தெரிவித்தார்.
மோடியின் யோகா அனுபவம்
மேலும் அவர், சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் பற்றியும், அதில் பங்கேற்றது பற்றியுமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். மக்களை யோகா செய்ய மோடி வலியுறுத்தவும் செய்தார்.
யோகா பெருமிதம்
ஆமதாபாத் நகரில், 55 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இது பெரும் சாதனையாக மாறியுள்ளதற்கு, பெருமிதம் தெரிவித்துக் கொண்டார்.
கார்டோசேட் செயற்கைக்கோள் வெற்றி
சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட கார்டோசேட் செயற்கைக்கோள் வெற்றிக்கு, மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்தியா விண்வெளித் துறையில் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, சிங்கப்பூர் பெருமை
சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 70 நாடுகள், யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அந்த கலைக்கும், இந்தியாவுக்கும் பெருமிதம் சேர்த்துள்ளதாக, பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
விளையாட்டுத்துறை ஊக்குவிப்பு
விளையாட்டுத் துறையில் சிறுவர்கள், இளைஞர்கள் ஈடுபடுவதை, அவர்களின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் அவர்கள் பெரும் சாதனையாளராக வர வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
ஆன் லைன் வணிகம்
பொதுமக்கள் தற்போது வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தைப் பணிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசிடம் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்கவும், சேவைகள் பற்றி நிதி உதவி பெறவும் அரசின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார் மோடி.
மதுரை பெண் உதாரணம்
இதற்கு உதாரணமாக பிரதமர் மோடி, மதுரையை சேர்ந்த பெண் ஒருவர், முத்ரா திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க, அரசிடம் இருந்து கடன் பெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இது பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதுபோல, நாட்டு மக்கள் அனைவரும் அரசின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி வளர்ச்சி பெறவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.