மோடி தலைமையில் 16ம் தேதி ‘மாநிலங்கள் கவுன்சில் கூட்டம்’... ஜெ. பங்கேற்பாரா?
டெல்லி: மாநிலங்கள் கவுன்சில் கூட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் வரும் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கடந்த 1990ம் ஆண்டு, ‘இண்டர் ஸ்டேட் கவுன்சில்' எனப்படும் மாநிலங்கள் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டமானது கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்தக் கவுன்சில் மாற்றி அமைக்கப்பட்டது. மண்டல அளவிலான அமைப்புகளை உருவாக்கியது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், ஐந்து மண்டலங்களில் கூட்டங்கள் நடந்தன. அப்போது, அந்தந்த மண்டலங்களில் இடம் பெற்றுள்ள, மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்று தங்களின் பிரச்னைகள் குறித்து பேசினர்.
இந்நிலையில், வரும் 1ம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி மற்றும் மனோகர் பரீக்கர் ஆகியோரும், நிரந்தர அழைப்பாளர்களாக உள்ள 11 அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் பங்கேற்று, பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமருடன் ஆலோசிக்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள், உள்நாட்டு பாதுகாப்பு, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்முறைகள், கல்வி, நேரடி மானிய திட்டம், ஆதார், சிறந்த நிர்வாகம், சமூக, பொருளாதார திட்டங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஜெ. பங்கேற்பாரா?
இந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் டெல்லி அரசும், இந்தக் கூட்டத்தில் தங்களது பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசும் எனத் தெரிகிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இதில் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.