காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்ற கெடு முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஆறு வார கெடு நாளை முடிவடைய உள்ளது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் மற்றும் தொழில்நுட்பக்குழு அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் மத்திய நீர்வளத்துறைச் செயலரை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தைத் தவிர வேறு எந்த ஒரு அமைப்பையும் ஏற்க முடியாது என்று தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவிரி வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர்நாப்தேவை சந்தித்து தமிழக அதிகாரிகள் உரையாடினர்.
அப்போது, உச்சநீதிமன்றத்தின் கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்று தமிழக அரசுக்கு வழக்கறிஞர் சேகர்நாப்தே பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 31ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.