சர்ச்சை மருமகனாக இல்லாமல் அருண்ஜேட்லி மாதிரி இருக்கனும்.. வதேராவை வெளுத்துக் கட்டிய பிரதமர் மோடி
ஸ்ரீநகர்: காஷ்மீரத்தின் மறைந்த தலைவர் தோக்ரா நல்ல மருமகனாக அருண்ஜேட்லியை தேர்ந்தெடுத்திருக்கிறார்...ஆனால் சில மருமகன்கள் என்றாலே சர்ச்சையாகத்தான் இருக்கிறது என்று சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி.
காஷ்மீரில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எல். தோக்ராவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
ஜி.எல். தோக்ரா உறவினர்களுக்கு தனிச்சலுகை காட்டாமல் சமூகத்துக்கு சுயநலமற்ற பங்களிப்பை செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் மிக உயர்ந்த தலைவரான தோக்ரா மாநிலத்தின் நிதி அமைச்சராக 26 பட்ஜெட்களை தாக்கல் செய்தவர்.
ஆனால் ஒரு போதும் அவரது மருமகனும் தற்போதைய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உட்பட தனது குடும்ப உறுப்பினருக்கு யாருக்கும் ஆதரவாக செயல்பட்டதில்லை. தோக்ரா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் பொது வாழ்வுக்கு தங்களது சொந்த வழியை தேர்ந்தெடுத்தனர். தோக்ரா அருண் ஜேட்லி போன்ற நல்ல மருமகனைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இன்றோ மருமகனால் எந்த மாதிரியான சர்ச்சைகள் வருகிறது என்பது நமக்கு தெரியும். (சோனியா மருமகன் ராபர் வதேராவை மறைமுகமாக குறிப்பிட்டார் பிரதமர் மோடி).
இன்றைய அரசியலில் நமது பாரம்பரியம் பிளவுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இது வருத்தப்படவேண்டிய விவகாரம். தேசத்துக்காக அரும்பாடுபட்டவர்கள், இன்னுயிர் ஈந்தவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், அவர்களது அரசியல் கொள்கை என்னவாக இருந்தாலும் அவர்களை சமமாக பாவித்து பெருமிதம் கொள்வதோடு உரிய மரியாதை செலுத்த வேண்டும். அரசியல் தீண்டாமை கூடாது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.