டெல்லி தேர்தல் தோல்வியை இன்னமும் சகிக்க முடியாதவராக இருக்கிறார் மோடி.... அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கு
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை பிரதமர் மோடியால் சகிக்க முடியாமல்தான் தொடர்ந்து மாநில அரசுக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார் என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ க்கள் 21 பேர் அமைச்சர்களுக்கு உதவியாக சட்டசபை செயலாளர்களாக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்தப் பதவி இணை அமைச்சர் அந்தஸ்திலானது.
ஆனால் "டெல்லி மாநில அரசு சட்டத்தின்படி முதல்வர் அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலாளரை நியமிக்க முடியும். 21 எம்.எல்.ஏக்கள் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கிறார்கள். இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த தேர்தல் ஆணையம் எம்.எல்.ஏ பதவியில் இருந்து உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு 21 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் 21 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும்வகையில் டெல்லி சட்டசபை உறுப்பினர்கள் சட்டம் 1997-ல் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு டெல்லி மாநில அரசு அனுப்பிவைத்தது ஆனால் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து 21 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இது கேஜ்ரிவால் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
அதில், செயல்படக்கூடாது அல்லது வேறு யாரையும் செயல்படவிடக் கூடாது என்ற கொள்கையை மோடி பின்பற்றுகிறார். டெல்லியில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியை பிரதமரால் சகித்துக்கொள்ள முடியவில்லை; டெல்லி அரசை செயல்பட விடாமல் மோடி தடுக்கிறார்.
ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற செயலர்கள் இருக்கும் போது டெல்லியில் மட்டும் நாடாளுமன்ற செயலர்களை தகுதி நீக்கம் செய்தது ஏன்? என்றும் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.