பரபரப்பு.. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் போலீஸ் சோதனை!
Recommended Video
டெல்லி: டெல்லி மாநில தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநில தலைமைச் செயலாளராக உள்ளவர் அன்ஷு பிரகாஷ், அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் இல்லத்தில் சில தினங்கள் முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது பங்கேற்றார். அப்போது அதில் பங்கேற்ற 11 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாக, தலைமைச் செயலாளர் போலீசில் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
தலைமைச் செயலாளருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் முகத்தில் அடிபட்ட காயம் இருப்பது உறுதியானது.
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த போலீஸார், கெஜ்ரிவாலின் ஆலோசகர் கூறிய வாக்குமூலத்தை ஆவணமாக தாக்கல் செய்தனர். அதில் தலைமை செயலாளரை எம்எல்ஏக்கள் இருவரும் தாக்கியதை ஆலோசகர் நேரில் பார்த்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
முதல்வர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அதிகாரிகள் தரப்பு மிரட்டல்விடுத்துள்ளது. இந்த நிலையில் கேஜ்ரிவால் இல்லத்தில் இன்று திடீரென போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சம்பவ தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அவர்கள் சேகரிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல்வர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
வெளியே காரில் இருந்தபடி நிருபர்களிடம் கேஜ்ரிவால் பேசுகையில், இதேபோல நீதிபதி லோயா மரண விவகாரம் தொடர்பாக, அமித்ஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என ஆவேசமாக கூறினார். முதல்வர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வரும் சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.