உத்தரகண்ட் பெரு வெள்ளம்: 26 உடல்கள் மீட்பு... சுழற்சி முறையில் இரவு, பகலாக மீட்பு பணி தீவிரம்!
டேராடூன்: உத்தரகண்டில் வெள்ளப்பெருக்கு காரணமாக தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை இந்தோ திபத் காவல் படையினர் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இரவு 8 மணி நிலவரப்படி 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 171 பேர் மாயமாகி உள்ளதாகவும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சுரங்கதத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
திடீர் வெள்ளம்
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள தவுலிகங்கா ஆற்றில் நேற்று திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியிலுள்ள பனிப்பாறை ஒன்று வெடித்ததில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்
திடீரென்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தபோவனிலுள்ள சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகளில் தற்போது இந்தோ திபத் போலீஸ் படையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு, பகலாக மீப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலர் மாயம்
இந்த நிலையில் தபோவன் சுரங்கத்தில் இருந்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மாயமாகி உள்ளதாகவும், இந்த் சுரங்கதத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை
இந்த மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுரங்கத்தில் எவ்வளவு பேர் உயிருடன் உள்ளனர் என்பதைக் கண்டறிய உதவும் கருவிகளுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சுரங்கம் சுமார் 1500 மீட்டர் நீளமுடையதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுரங்கத்திற்கு ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருப்பதால் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சவாலாக மாறியுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு தெரிவித்துள்ளது. தொடந்து சுழற்சி முறையில் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.