முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக- கேரள எல்லையில் பதட்டம்
குமுளி: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழக - கேரள எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஓ பன்னீர் செல்வம்
தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இனிப்பு வழங்கி இந்த தீர்ப்பை வரவேற்றனர். பெரியகுளத்தில் தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.
தேனி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

எதிர்ப்பு
இதற்கிடையே கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) முழு கடையடைப்பு (பந்த்) அறிவிக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் குவிப்பு
நேற்று தீர்ப்பு கூறப்படும் என்ற தகவலை அடுத்து, தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம், குமுளியில் நேற்று முன்தினம் இரவே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். குமுளியில் கட்டப்பனை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

லோயர் கேம்பில்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை விசுவரூபம் எடுத்த போது தேனி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்று குமுளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக மக்கள் குமுளிக்கு திரண்டு சென்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் தமிழக பகுதியான லோயர்கேம்ப் பகுதியில் தமிழக போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

போடி மெட்டு...
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் லோயர்கேம்ப்பில் குவிந்து உள்ளனர். பாதுகாப்பு பணிகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். லோயர்கேம்ப் மட்டும் இன்றி தமிழக-கேரள எல்லையான போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

கூலித் தொழிலாளர்கள்
தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், போடி, தேவாரம் போன்ற இடங்களில் இருந்து தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய், காபி, தேயிலை தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலியாக தமிழக தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் ஏதேனும் ஏற்படக்கூடாது என்பதற்காக கேரளாவுக்கு நேற்று வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளர்களை முன்கூட்டியே திரும்பி வர தேனி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி கம்பம் மெட்டு, போடி மெட்டு, லோயர்கேம்ப் மலைச்சாலை வழியாக தமிழக கூலித்தொழிலாளர்கள் நேற்று பிற்பகலில் இருந்து திருப்பி அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications