கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் நரேந்திர மோடி!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றி போது கேரள மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்துக்கு இரண்டு பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி திருச்சூரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், கேரளா மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் முன்னதாகவே இங்கு வந்திருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், மாநிலத்தில் அரசியல் வரலாற்றை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், பாரதீய ஜனதா மற்றும் அதனுடைய கொள்கைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 வருடங்களில் 200-க்கும் அதிகமான பாரதீய ஜனதா தொண்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். கேரளாவில் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். உயிர்த்தியாகம் செய்த அனைத்து பாரதீய ஜனதா தொண்டர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
கேரளாவில் பாஜக மூன்றாவது சக்தியாக உருவெடுத்து உள்ளது.
கேரளாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக பாஜக வரும். கேரளாவின் தலைவிதியை மாற்றும். என்று கூறிய பிரதமர் மோடி, கேரளாவில் ஆட்சி செய்யும் இரு கூட்டணியும் மக்களை ஏமாற்றி வருகிறது. ஒரு கூட்டணி ஆட்சிக்கு வருகிறது, மக்களை ஏமாற்றுகிறது. மக்கள் ஒவ்வொரு 5 வருடங்களும் கோபம் அடைகின்றனர், அப்போது ஆட்சியில் இருக்கும் கூட்டணியை வெளியேற்றுகின்றனர், அப்போது மற்றொரு கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.
இந்த சுழற்சியானது இதுவரையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு கூட்டணியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மக்களை கொள்ளை அடித்து வருகின்றனர். ஆனால் இப்போது கேரளா மக்கள் மேலும் கோபம் அடைய தேவையில்லை. கேரளாவில் மூன்றாவது சக்தி உருவெடுத்து உள்ளது. இது கடவுள் சிவனின் மூன்றாவது கண்ணை போன்றது, இது பாவங்களை அழிக்கும், தீயவர்கள் மற்றும் ஊழலிடம் இருந்து விடுதலை அளிக்கும். மூன்றாவது சக்தியானது, கேரளாவின் எதிர்காலத்தை மாற்றும் மாநிலத்திற்கு வளர்ச்சி மற்றும் அமைதியை கொண்டு வரும்.
2022- ஆம் ஆண்டு இந்தியா இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் போது, அனைவருக்கும் சொந்த வீடு இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கனவு என்று மோடி தெரிவித்துள்ளார்.