என் மகனை மட்டுமல்ல.. அமித்ஷா மகனையும் விசாரியுங்க... யஷ்வந்த் சின்ஹா கலகக் குரல்
என் மகன் மீதான புகாருடன் அமித்ஷா மகன் மீதான புகாரையும் விசாரிக்க வேண்டும் என்கிறார் யஷ்வந்த் சின்ஹா.
டெல்லி: பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் உள்ள என் மகன் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை மட்டுமல்ல பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகன் ஜெய் ஷா மீதான முறைகேடு குறித்தும் விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பரபரப்பை கிளப்பிய பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் மத்திய அமைச்சரான ஜெயந்த் சின்ஹா சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. பாரடைஸ் பேப்பரை முன் வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் ஜெயந்த் சின்ஹாவோ, தாம் அப்படியான எந்த ஒரு முதலீட்டையும் செய்யவில்லை; முன்னர் தாம் பணிபுரிந்த நிறுவனமே அம்முதலீடுகளைச் செய்திருந்தது என விளக்கம் தந்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு யஷ்வந்த் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பாரடைஸ் பேப்பரில் இடம்பெற்றிருக்கும் இந்தியர்கள் அனைவர் மீதும் காலக்கெடு விதித்து விசாரணை நடத்த வேண்டும். என் மகன் ஜெயந்த் சின்ஹா மீதான புகாரையும் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விசாரணையை 15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் நடத்த வேண்டும். அதேபோல அண்மையில் முறைகேடு சர்ச்சையில் சிக்கிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜிஎஸ்டி என்பதைப் பொறுத்தவரையில் முற்று முழுதாக மாற்றித்தான் அமைக்க வேண்டும். அதை டிங்கரிங் எதுவும் செய்ய முடியாது.
இவ்வாறு சின்ஹா கூறினார்.