ஜெ. சொத்துக் குவிப்பு: ஊழல் தடுப்புச் சட்டப்படி தண்டனை: பவானி சிங் வாதம்
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கு காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட செயல்படாமல் இருந்த கம்பெனிகளை வாங்கி, அந்த கம்பெனிகள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி வருமானத்திற்கும் அதிகமாக சேர்த்த பணத்தை டெபாசிட் செய்துள்ளதால், குற்றவாளிகளுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின்படி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் செய்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ரிவர்வே ஆக்ரோ பாரம் கம்பெனி இயக்குனர் ஆர்.குமார் ஏற்கனவே அளித்திருந்த சாட்சியத்தின் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து அரசு வக்கீல் முருகேஷ் மரடி குறுக்கு விசாரணை நடத்தினார்.
17வது நாளாக வாதிட்ட பவானிசிங்
அதைத் தொடர்ந்து, வழக்கில் இறுதி வாதத்தை 17வது நாளாக அரசு வக்கீல் பவானிசிங் தொடங்கினார். அவர் வாதம் செய்தபோது, இந்த வழக்கில் குற்றவாளிகள் எந்தெந்த வகையில் சொத்து சேர்த்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் என்ன என்ற விவரங்களை தகுந்த சாட்சியங்கள் மூலமும், அரசு தரப்பில் அளிக்கப்பட்ட 259 சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம், வழக்கு தொடர்பாக தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசார் சேகரித்த ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்தற்கான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதி உரையில்
இறுதியாக குற்றவாளிகள் எந்ததெந்த வகையில் சொத்து சேர்த்துள்ளனர் என்ற சிறு தொகுப்புரையை பதிவு செய்கிறேன்.வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு வழக்கு காலத்திற்கு முன் ரூ.2 கோடியே 01 லட்சத்து 83 ஆயிரத்து 951 சொத்து இருந்தது. 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறிய வியாபார கடை மற்றும் அவரது கணவர் அரசு துறையில் பணியாற்றியது மட்டுமே சொத்தாக இருந்தது.
பல மடங்கு உயர்ந்த சொத்து
3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனின் ஆண்டு வருமானம் ரூ.44 ஆயிரத்து 400 ஆகவும், 4வது குற்றவாளியான இளவரசின் ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரமாக இருந்தது. ஆனால் வழக்கு காலமான 1.7.1991 முதல் 30.4.1996 காலகட்டத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வங்கிக் கணக்கில் பணம்
வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை மையமாக வைத்து அவர் வீட்டில் வசித்து வந்த 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியாக சுதாகரன், 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோர் சொத்து சேர்த்துள்ளனர். அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த ராமஜெயம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் குற்றவாளிகள் சார்பில் பணத்தை எடுத்து சென்று, குற்றவாளிகள் இயக்குனர் மற்றும் பங்குதாரர்களாக இருந்த கம்பெனி வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
15 கம்பெனிகள்
குற்றவாளிகள் எந்தெந்த கம்பெனிகளில் இயக்குனராக உள்ளனர் என்ற விவரமும் அதற்கான ஆதாரங்களையும் 15.2.1994 அன்று ஒரே நாளில் 15 கம்பெனிகள் தொடங்கி உள்ள விவரத்தையும் அரசு வக்கீல் எடுத்துரைத்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் அதிகம் சொத்து சேர்த்துள்ளதற்கான பல ஆதாரங்கள் கொடுத்துள்ளோம். அதில் நமது எம்.ஜி.ஆர். நிறுவன வங்கி கணக்கில் ரூ.14 கோடியும், சூப்பர்-டூப்பர் டிவி வங்கி கணக்கில் ரூ.6 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.இந்த கம்பெனிகள் தொடங்கப்பட்ட காலத்தில் வங்கி கணக்கு தொடங்கவில்லை.
வருமானவரி தாக்கல்
கம்பெனிகள் வரவு-செலவு தொடர்பான எந்த தகவலும் வருமான வரித்துறையில் தாக்கல் செய்யவில்லை.ஆனால் வழக்கு காலத்தில் பல கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காட்டியுள்ளனர். அந்த பணம் நாளிதழ் மூலம் சாந்தாவாக பெற்றதாக கூறியுள்ளனர். இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.
பொய் சாட்சியம்
இது தொடர்பாக அளிக்கப்பட்ட சாட்சியங்களும் பொய்யான தகவலாகும். இதுவே வழக்கில் குற்றவாளிகள் வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்து, அதை கம்பெனிகள் பெயரில் டெபாசிட் செய்துள்ளது உறுதியாகிறது.
அன்பழகன் மனு
மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சிகள் சென்னையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இரண்டாவது முறையாக 2001ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்தபின், ஏற்கனவே அளிக்கப்பட்ட சாட்சிகளை மறு விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டனர். அதனால் இவ்வழக்கில் நீதி கிடைக்காது என்று தி.மு.க. பொதுசெயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை
அதையேற்று பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கில் குற்றவாளிகள் தவறு செய்துள்ளனர். அதை மறைக்க பல வழிகளில் முயற்சித்துள்ளனர். ஆனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் சேகரித்த ஆவணங்கள், சாட்சிகள் கொடுத்து வாக்குமூலம் ஆகியவை குற்றவாளிகளுக்கு எதிராகவுள்ளது. ஆகவே குற்றவாளிகளுக்கு ஊழல் தடுப்பு சட்டம் 1988, 13 (1) (இ) பிரிவின் கீழும், இந்திய தண்டனை சட்டம் 109 (கூட்டு), 120 (பி) ஆகிய பிரிவின் கீழ் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.