ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாத ரகுராம்ராஜன்
டெல்லி: பணவீக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாததன் மூலம் வர்த்தகர்களை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன்.
நவம்பர் மாத பணவீக்க தகவல்கள் திங்கட் கிழமை வந்தது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் (7.52%) அதிகமாக இருந்தது.
அதே சமயத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணும் (11.24%) 9 மாதங்களில் இல்லாத உச்சபட்சமாக இருக்கிறது. மேலும் அக்டோபர் தொழில் உற்பத்தி குறியீடும் (ஐ.ஐ.பி.) (-1.8%) எதிர்மறையாக (-1.8%) வந்திருக்கிறது.
நிதிக்கொள்கை
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் இன்று மும்பையில் நடைபெற்றது.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களை ஓரளவு அதிகரிக்கப்படலாம் என வர்த்தகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கூட்டத்தில், அத்தகைய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
வட்டி விகிதம்
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) உள்ளிட்ட அனைத்து விதமான வட்டி விகிதங்களிலும் மாற்றம் செய்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
தற்போது, ரெப்போ 7.75 சதவீதமாகவும், சி.ஆர்.ஆர். 4 சதவீதமாகவும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு
மும்பை ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், "தற்போது, நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பங்குச்சந்தை உயர்வு
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று முற்பகல் 246.07 புள்ளிகள் உயர்ந்து 20,858.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79.35 புள்ளிகள் உயர்ந்து 6,218.40 ஆக இருந்தது.
இரண்டு முறை உயர்வு
வட்டி விகிதங்களை அதிகரிக்கப்பதில்லை என்ற ரிசர்வ் வங்கி ஆளுனரின் முடிவு தங்களுக்கு ஆச்சரியத்தை அளித்ததாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்று பிறகு இரண்டு முறை வட்டி விகிதங்களை உயர்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.