ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் போர்க்கொடி!!
டெல்லி: ராகுல் காந்தி இளைஞர் காங்கிரசுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதாலா கடுமையாகத் தாக்கி உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்துக்கு அதன் துணைத்தலைவர் ராகுல் காந்திதான் தலைமை ஏற்றிருந்தார். எனவே இந்த தோல்விக்கும் அவர்தான் காரணம் என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் டி.எச்.முஸ்தபா, ராகுலை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ராகுல் ஒரு கோமாளி போல நடந்துகொண்டார். அதன் காரணமாகத்தான் தேர்தலில் காங்கிரஸ் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது. அவர் தாமாக பதவியிலிருந்து விலகாவிட்டால் அவரை நீக்க வேண்டும் என்றார்.
இதற்காக அவர் கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதேபோல் ராகுலை விமர்சித்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநில உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதாலாவும் ராகுல் காந்தியை தாக்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர், ராகுல் காந்தி இளைஞர் காங்கிரசுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார். இளைஞர் காங்கிரசுடன்தான் கூடுதலாக பணியாற்றுகிறார். ராகுல் காந்திக்கும், மக்களுக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் இணைவதற்கான காலம் கனிந்து விட்டது என்றார்.
இக்கருத்தை தெரிவித்ததற்காக அனேகமாக ரமேஷ் சென்னிதாலா மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.