முதல்வர் பதவி யாருக்கு? குழப்பிவிட்ட ராகுல் மீது கடுப்பில் தெலுங்கானா காங். தலைவர்கள்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் பதவியில் பெண் ஒருவரை அமர வைக்க விரும்புகிறோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சால் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிர்ந்து போயுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தின் முதலாவது முதல்வர் பதவியைப் பெற்றுவிடுவதில் பலரும் முனைப்பு காட்டுகின்றனர்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ், லோக்சபா தேர்தலுடன் முதல்வர் கனவில் சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகிறார். காங்கிரஸில் பலர் முதல்வர் கனவில் இருக்கின்றனர்.
இந்த மாநிலத்தில் பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தலித் ஒருவரையே தெலுங்கானாவின் முதல்வராக்குவோம் என்று அறிவித்து முதல் சர்ச்சையை வித்திட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு எழவே பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அல்லது பெண் ஒருவரையே முதல்வராக்குவோம் என்று பல்டி அடித்தார்.
ஜெய்ராம் ரமேஷின் இந்த நாரதர் கலகத்தை ராகுல் காந்தி ஊதிப் பெருக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். இங்கு பிரசாரம் செய்த ராகுல் காந்தி, தெலுங்கானாவில் முதல்வராக பெண் ஒருவரையே அமர்த்த விரும்புகிறோம் என்றார். இதனால் முதல்வர் கனவில் இருக்கும் தெலுங்கானா காங்கிரசார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பொன்னால லக்ஸமையா (பிற்படுத்தப்பட்டோர் சமூகம்), தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜனா ரெட்டி, தாமோதர் ராஜ நரசிம்ஹா, பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களான டி. ஸ்ரீனிவாஸ், உத்தம்குமார் ஆகியோர் முதல்வர் கனவில் இருப்பவர்கள்.
இவர்களுடன் கீதா ரெட்டி, அருணா, சுனிதா லக்ஸ்ம ரெட்டி மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோரது பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. தற்போது ராகுல் காந்தி பெண் ஒருவர்தான் முதல்வர் என்று கூறியிருப்பதால் பிற "முதல்வர் பதவி" கனவு காணும் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.. இது தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.