இரண்டு நாளில் 3-வது முறையாக ராகுல் காந்தி கைதாகி விடுதலை.. டெல்லியில் பரபரப்பு !
டெல்லியில் கடந்த இரண்டு நாளில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி போலீசார் நேற்று மாலை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது உடலை பார்க்கச் சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே இரண்டு முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் ராகுல்.
இந்த நிலையில் ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த ராகுலை இந்தியா கேட் அருகே டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி மீண்டும் கைது செய்தனர். முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ராகுல் உடனடியாக துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இரண்டு மணி நேரத்திற்கு பின்பு அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களில் ராகுல் கைதாகி விடுதலை ஆவது இது மூன்றாவது முறை ஆகும்.