பெங்களூருவில் இந்திரா கேண்டீன் திறந்து வைத்த ராகுல் காந்தி
பெங்களுருவில் இந்திரா கேண்டீனை துவக்கி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி.
பெங்களூரு: மலிவு விலை உணவகமான இந்திரா கேண்டீனை பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று திறந்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் அம்மா கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் உணவு அளிக்கப்படுவதால் மக்களிடையே அம்மா கேண்டீன்கள் வரவேற்பு பெற்றன. இது போல பிற மாநிலங்களிலும் மலிவுவிலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் வாழும் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த உணவகத்திற்கு இந்திரா கேண்டீன் என மாநில அரசு பெயர் வைத்து உள்ளது.
மேலும் இந்த உணவகங்கள் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். பெங்களூரு ஜெயநகரில் கனகபாளையா பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்திரா கேண்டீனை இன்று ராகுல்காந்தி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமைய்யா, அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தனி ஒருவர் கூட பசியில் தவிக்கக் கூடாது என்று கேண்டீனை திறந்து வைத்து பேசிய ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த கேண்டீனில் காலை உணவாக இட்லி, புளி சாதம், பொங்கல், மதியம் சாப்பாடு, தயிர், பருப்பு குழம்பு, இரவு தக்காளி சாதம், புளிசாதம், புதினா சாதம் போன்றவை வழங்கப்பட உள்ளது.
உணவகத்தில் உணவு சாப்பிட வரும் மக்களிடம் மரியாதையாக பதில் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நேரமும் சுமார் 600 பேருக்கு உணவு தயாராக இருக்கவேண்டும். மேலும் உணவு உண்பவர்களுக்கு தூய்மையான தண்ணீர் வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.