அகில இந்திய காங். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராகுல் காந்தி! டிச. 16-ல் பொறுப்பேற்பு!!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல் காந்தி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகாலம் சோனியா காந்தி இருந்து வந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியைத் தலைவராக்க மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ராகுல் வேட்பு மனு
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ராகுல் காந்தி வேட்பமனுத் தாக்கல் செய்தார்.
வாபஸ் பெற கடைசி நாள்
அவரையே தலைவராக அறிவிக்கக் கோரி 89 பேர் மனுக்கள் செய்தனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசிநாள்.
16-ல் சான்றிதழ், பொறுப்பேற்பு
ராகுல் காந்தி மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சோனியா காந்தி முன்னிலையில் ராகுல் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வரும் 16-ந் தேதி வழங்கப்படும்.
சோனியா ஒப்படைக்கிறார்
அன்றைய தினமே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி முறைப்படி பொறுப்பேற்பார். அவரிடம் தற்போதைய தலைவர் சோனியா காந்தி பொறுப்புகளை ஒப்படைப்பார்.
நேரு குடும்பத்தில்...
காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகி இருக்கிறார் ராகுல் காந்தி. நேரு குடும்பத்தில் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியாவைத் தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகி உள்ளார்.