ஒடிஷா: பழங்குடி இன மக்களை இலக்கு வைத்து ராகுல், நவீன் பட்நாயக் மும்முர பிரசாரம்
கோராபுட்: ஒடிஷாவில் பழங்குடி இன மக்கள் அதிகம் வாழும் கோரபுட் மற்றும் நப்ரங்கபூர் மாவட்டங்களில் ஒரே நாளில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.
ஒடிஷா மாநிலத்தில் பழங்குடி இனத்தவர் அதிகம் வாழும் மாவட்டங்களில் கோராபுட் மாவட்டமும் ஒன்று. இங்கு மாவோயிஸ்டுகளின் ஆதிக்கமும் அதிகம். லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் பழங்குடி இனத்தவர் வாக்குகளை குறி வைத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
கோரபுட் மற்றும் நப்ரங்கபூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதே பகுதியில் கடந்த இரு நாட்களாக முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பழங்குடி இனத்தவரின் நண்பன்.. ராகுல் பேச்சு
ராகுல் காந்தி தமது பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சி மட்டுமே பழங்குடி இனத்தவருக்காக போராடுகிறது.. ஏராளமான இயற்கை வளம் கொண்ட பணக்கார மாநிலம்தான்.. ஆனால் மக்கள் ஏழைகளாக இருக்கின்றனர்.. உங்களது சொத்தை சுரங்க மாபியாக்களிடம் ஒப்படைத்துவிட்டது ஒடிஷா மாநில அரசு என்றெல்லாம் சாடினார்.
மத்திய அரசு மீது புகார்
அதே நேரத்தில் பழங்குடி இனத்தவர் மேம்பாட்டுக்காக நீண்டகாலமாக கோரபுட்- பலாங்கீர் - கலஹாண்டி மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் கேபிகே மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த கோரி வருகிறோம். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை என்று முதல்வர் நவீன் பட்நாயக் புகார் பட்டியல் வாசித்து வருகிறார்.