வெறுப்பை விதைக்கும் பாஜகவிற்கு மாற்றாக அன்பை பரப்புங்கள்... காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் அட்வைஸ்!
பாஜக நாட்டு மக்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் விதைக்கிறது, இதற்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்ப வேண்டும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி அரசு வெறுப்பையும் கோபத்தை பரப்புவதாக தெரிவித்துள்ளார். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் அதற்கு ஏற்ப அன்பு மற்றும் நல்லிணக்கமான சூழலை உருவாக்க கட்சியினருக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தி தொடக்க உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது : காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும். காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னமே அனைவரையும் ஒன்று சேர்க்கும் என்பதை மக்களுக்கு உணர்த்துங்கள் மேலும், மக்களிடையே அன்பை விதைக்கும் சூழலை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காங்.,பாஜக இடையேயான வித்தியாசம்
"பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமே பாஜக வெறுப்பையும் கோபத்தையும் விதைக்கிறது. ஆனால் நாம் அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்ப வேண்டும் என்றார்.
இளைஞர்களின் வேகம், மூத்தவர்களின் அனுபவம்
எனது தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரஸ் கட்சியில் மூத்த அரசியல் தலைவர்களின் அனுபவம், இளம் கட்சியினரின் வேகத்தை ஒருங்கே சேர்த்து மாற்றத்தை கொண்டு வர பாடுபடுவோம். எனினும் அந்த மாற்றமானது நமது கொள்கைகளையும் பழமையான விஷயங்களையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை இளைஞர்கள் முன்எடுக்கிறார்கள் என்றால் அது அனுவபமிக்க தலைவர்களின் ஆலோசனைகள் இன்றி முடியாது. எனவே இருவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே எனது திட்டம் என ராகுல் கூறினார்.
காங். மட்டுமே தீர்வு
பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்ற கோபத்தில் உள்ளனர். "தற்போதைய அரசின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் கலைத்துப்போய்விட்டனர். காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களின் வேதனைகளுக்கு தீர்வு கண்டு, துண்டாடப்படும் தேசத்தை காப்பாற்ற முடியும் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
சோனியா பங்கேற்பு
நாடு என்பது எப்படி அனைத்து மத, இனம் மற்றும் மனிதர்களுக்கு சொந்தமானதாக இருக்கிறதோ, அதே போன்ற தான் காங்கிரஸ் கட்சியும் அனைவருக்குமானது, நாம் யாரையும் விட்டுவிட முடியாது என்று ராகுல்காந்தி குறிப்பிட்டார். டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.