சர்ச்சைக்கு.. ஃபுல் ஸ்டாப்.. ஜம்முவில் கடும் குளிரில் ராகுல் காந்தி ஜெர்க்கின் அணிந்து நடைப்பயணம்!
ஸ்ரீநகர்: கடந்த செப்டம்பரில் தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை நேற்று ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி முதல் முறையாக இந்த யாத்திரையில் 'ஜெர்க்கின்' அணிந்து பயணித்துள்ளார். இத்தனை நாட்கள் வெறும் டிசர்டில் பயணித்தது பேசுபொருளான நிலையில் தற்போது அவர் 'ஜெர்க்கின்' அணிந்திருப்பதும் பாஜகவினரிடையே பேசுபொருளாகியுள்ளது.
கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சியிலிருந்து பல மூத்த தலைவர்கள் விலகியது, புதிய தலைமை வேண்டும் என்று சோனியா காந்திக்கு சொந்த கட்சித் தலைவர்களே கடிதம் எழுதியது போன்றவை காங்கிரஸ் கட்சியை நெருக்கடி நோக்கி தள்ளியது. இந்நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து மீட்க கட்சியை வேண்டிய பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். அதேபோல புதிய தலைவராக மல்லிகர்ஜூனா கார்கேவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு புறம் மல்லிகர்ஜூனா கார்கே தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கையில் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள ராகுல்காந்தி களத்தில் இறங்கினார். அதன்படி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுமார் 3500 கி.மீ தொலைவுக்கு 'பாரத் ஜடோ யாத்திரை' எனும் பெயரில் தேச ஒற்றுமை நடைக்பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடி கடந்த செப்டம்பரில் யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டீசர்ட்
கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களை கடந்தது கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தானில் யாத்திரை 100வது நாளை எட்டியது. இந்த பயணத்தில் அவர் வெள்ளை நிற டிசர்ட் மட்டுமே அணிந்திருந்தார். இது குறித்து பாஜகவினர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். ராகுல் அணிந்துள்ள டிசர்ட் விலையுயர்ந்தது என்றும், சாமானியர்களுடன் நடைப்பயணம் செய்யும் அவர் இவ்வாறு விலையுயர்ந்த டிசர்ட்டை அணிவது ஏன்? என்றும் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பியிருந்தனர். இந்நிலையில் யாத்திரையானது 100 நாட்களை கடந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் நுழைந்தது.
குளிர்
அப்போது டெல்லியில் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டிருந்தது. யாத்திரையில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஜெர்க்கின், ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்திருந்தனர். ஆனால் ராகுல் காந்தி மட்டும் வெறும் டிசர்ட்டுன் நடைப்பயணத்தில் பங்கேற்றிருந்தார். இவ்வளவு குளிரிலும் வெறும் டிசர்ட்டுடன் பயணிப்பது அசாத்தியமானது என காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பேசிக்கொண்டனர். ஆனால் பாஜக ஆதரவு நெட்டிசன்கள் சும்மா இருக்கவில்லை. ராகுல் அணிந்திருந்த டிசர்ட்டை போட்டோ எடுத்து ஜூம் செய்து, ராகுல் டிசர்ட்டுக்குள் வேறு ஒரு ஆடையை அணிந்திருக்கிறார் என்று கூறினர்.
தவ மனநிலை
இது உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் ஒரு வகை தெர்மல் உள்ளாடை. எனவேதான் அவர் கடும் குளிரிலும் வெறும் டிசர்ட்டுடன் பயணிக்கிறார் என்று கூறினர். ஆனால் காங்கிரஸ் ஆதரவு நெட்டிசன்கள் இதற்கு வேறு ஒரு விளக்கத்தை கொடுத்தனர். அதாவது ராகுல் தனது உயர்ந்த நோக்கத்திற்காக ஒருமனதுடன் பயணிக்கிறார். எனவே அவருக்கு இந்த குளிர், வெயில், பசி, தாகம் இதெல்லாம் தெரியாது என்றும் ராகுல் ஒரு 'தவ' மனநிலைக்கு வந்துவிட்டார் எனவும் கூறினர். இப்படியே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது யாத்திரை காஷ்மீரை அடைந்திருக்கிறது.
ஜெர்க்கின்
இதுவரை இந்த யாத்திரை 125 நாட்கள் பயணித்து 10 மாநிலங்கள் 52 மாவட்டங்களை கடந்து வந்திருக்கிறது. காஷ்மீரில் 16 டிகிரி அளவு வெப்பநிலை நிலவுவதால் தற்போது அவர் தனது வழக்கமான வெள்ளை நிற டிசர்ட்டுக்கு மேலே கருப்பு நிற ஜெர்க்கின் ஒன்றை அணிந்து பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இது குறித்து பாஜக ஆதரவு நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். தற்போது கத்துவாவில் இருக்கும் ராகுல் காந்தி வரும் 27ம் தேதி ஸ்ரீநகரில் நுழைகிறார். இந்த பயணத்தில் அவருக்கும் அவருடன் நடப்பவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜாமர்கள்
சில இடங்களில் அவர் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாத்திரை பயணிக்கும் இடங்களில் ராணுவமும், துணை ராணுவப்படையினரும் யாத்திரையை சுற்றி பாதுகாப்பு அரணை உருவாக்கியுள்ளனர். அதேபோல இவர்கள் பயணிக்கும் இடங்களில் ஜமர்களும் பயன்படுத்தப்படுகின்றன.