மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் தம்பி ஒரு ஸ்டேஷன் மாஸ்டர்
பெங்களூர்: ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சதானந்த கவுடாவின் தம்பி சுரேஷ் கவுடா ரயில் நிலைய மாஸ்டராக உள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா திங்கட்கிழமை மாலை கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது தம்பி சுரேஷ் கவுடா கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள நந்திகூர் ரயில் நிலைய மாஸ்டராக உள்ளார்.
தனது அண்ணன் ரயில்வே துறை அமைச்சரானது குறித்து சுரேஷ் கூறுகையில்,
நான் என் அண்ணனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் நான் எதையும் கேட்பதை அவரும் விரும்பமாட்டார். அவர் முதல்வர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக இருந்த போது கூட நான் அவரிடம் எதுவும் கேட்டது இல்லை. அவர் மாநிலத்தில் அதிலும் குறிப்பாக தக்ஷின கன்னடா பகுதியில் ரயில்வே துறையை முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
மோடி அமைச்சரவையில் என் அண்ணனுக்கு கேபினட் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு ரயில்வே போன்ற நல்ல துறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
நான் ரயில்வே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இந்த துறையில் சேர்ந்தேன் என்றார்.
1985ம் ஆண்டு ஹூப்ளி ரயில் நிலையத்தின் துணை மாஸ்டராக சுரேஷ் கவுடா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2008ம் ஆண்டு நந்திகூர் ரயில் நிலையத்தின் மாஸ்டராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.