தூக்கு விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப மோடியிடம் ராஜபக்ஷே ஒப்புதல்- சுவாமி
டெல்லி: போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களையும் இந்தியா கொண்டுவர ராஜபக்ஷே ஒப்புக்கொண்டதாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன்சுவாமி, தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை ஐவரை போதை மருந்து கடத்தியதாக கைது செய்த இலங்கை பாதுகாப்பு துறை, அதற்கான ஆவணங்களை தயாரித்து, குற்றவாளிகள் என கோர்ட்டில் நிரூபித்தது. இதையடுத்து கோர்ட் கடந்த மாதம் 30ம்தேதி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர். மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களில் குதித்தன.
Namo and Rajapaksa spoke on the phone yesterday&agreed to process papers & transfer 5 fishermen convicted to Indian jail. I am vindicated!
— Subramanian Swamy (@Swamy39) November 10, 2014
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கும்படியும், வழக்கு தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டதாக சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். மேலும், இதற்கு ராஜபக்ஷே ஒப்புக்கொண்டதாகவும் சு.சுவாமி கூறியுள்ளார்.
மேலும், தான் நிரூபித்து (சாதித்து?) விட்டதாகவும் அந்த டிவிட்டில் சுவாமி கூறியுள்ளார். இந்தியா-இலங்கை நடுவே நடைமுறையிலுள்ள ஒப்பந்தப்படி கைதிகள் இடமாற்றம் சாத்தியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.