சாப்பாட்டுப் பாத்திரத்தை தொட்ட தலித் மாணவனை உதைத்த ஆசிரியர்.. நியாயம் கேட்ட தந்தை மீது போலீசில் புகா
ஜோத்பூர்: ராஜஸ்தானில் மதிய உணவு பரிமாறப்பட்ட பாத்திரத்தை கையால் தொட்ட தலித் மாணவரை ஆசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகே உள்ள அரசு பள்ளியில் வழக்கம் போல கடந்த வெள்ளியன்று மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, 10 வயது தலித் மாணவன் தினேஷ் மேக்வா, உணவு பரிமாறப்பட்ட பாத்திரத்தை தொட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு மதிய உணவு பொறுப்பாளரும், ஆசிரியருமான ஹேமாராம் சவுத்ரி ஆத்திரமடைந்தார். அதோடு, உணவுப் பாத்திரத்தைத் தொட்டதற்காக அவர் மாணவன் தினேஷை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
மாலை பள்ளி முடிந்து காயங்களுடன் வீட்டிற்கு வந்த மாணவரைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிகிச்சைக்காக மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளார் மாணவரின் தந்தை மனாராம் மேக்வால். அப்போது மேக்வாலையும் ஆசிரியர் ஹேமாராம் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மனாராம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே பள்ளி நேரத்தில் பணி செய்ய விடாமல், ரகளையில் ஈடுபட்டதாக மனாராம் மீதும் ஆசிரியர் ஹேமாராம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இரு புகார்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.