கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு லேட்... காதைப் பிடித்து மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புகார் கூட்டம் ஒன்றிற்கு காலதாமதமாக வந்த பாஜக அமைச்சர் ஒருவர் காதுகளைப் பிடித்துக் கொண்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
ராஜஸ்தான் மாநில பாஜக சார்பில் ஜெய்பூரில் கருத்து கேட்பு மற்றும் புகார் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் காலதாமதமாக வந்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சுகாதார துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோரும் தாமதமாக வந்தார். இதனையடுத்து அவர் தாமதமாக வந்ததற்கு தனது காதுகளை பிடித்து மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து, "நாங்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்க முயற்சி செய்கிறோம். எங்கள் அமைச்சரின் மன்னிப்பு கேட்ட பாங்கு மக்களுக்கான எங்கள் கட்சியின் அர்ப்பணிப்பை காட்டுகிறது" என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய துறை அமைச்சர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சரும் கலந்து கொண்டனர்.
பாஜக கட்சியின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ராஜேந்திர ரத்தோர் தாமதமாக வந்ததற்காக மக்களிடம் காதுகளை பிடித்து மன்னிப்பு கோரியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.