ராஜிவ் கொலை- தூக்கு ரத்து கோரும் வழக்கு விசாரணை பிப்.4க்கு ஒத்திவைப்பு
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்டது. மூவரும் தங்களது தூக்கை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர்.
இந்த கருணை மனு 11 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டது. இப்படி 11 ஆண்டுகால தாமதத்துக்குப் பின்னர் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருப்பதால் தங்களது தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது மூவரின் கோரிக்கை.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர்கள் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா, தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டால் அதன் அடிப்படையில் தண்டனையை குறைக்கலாம் என ஜனவரி 21ந் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. மூவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று தமது வாதத்தை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிபகள் பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். பிப்ரவரி 4-ந் தேதியன்று மத்திய அரசு தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட இருக்கின்றன.