ராஜ்யசபா தேர்தல்! எம்எல்ஏக்களை இழுக்கும் பாஜக! ரெசார்ட் அரசியலில் இறங்கிய காங்கிரஸ்! பரபர ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி 4 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்கள், ஆதரவு அளிக்கும் சுயேச்சை மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்களை ரெசார்ட்டுக்கு அழைத்து செல்ல உள்ளது. தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை பாஜக இழுத்து ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற அச்சத்தில் இதனை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் 57 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை தொடர்ந்து அந்த இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி முடிவடைந்துவிட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 4 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அசோக் கெலாட் உள்ளார்.

41 எம்எல்ஏக்களின் ஆதரவு
இங்கு ஜூன் 10ம் தேதி எம்எல்ஏக்கள் ஓட்டுக்கள் செலுத்தி ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்ய உள்ளனர். 200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்கள், சுயேச்சையாக 13 பேர் உள்ளனர். இதுதவிர ஆர்எல்பி கட்சிக்கு 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிடிபி கட்சிக்கு தலா 2 எம்எல்ஏக்கள், ஆர்எல்டிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனர். ராஜ்யசபா எம்பியாக போட்டியிடும் நபர் ஒருவருக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்கள்
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் 3 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 2 பேரின் வெற்றி உறுதியாகி உள்ளது. இதுதவிர காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்எல்ஏக்களின் ஓட்டு உபரியாக இருக்கும். இதோடு சுயேச்சைகள் மற்றும் பிறகட்சி எம்எல்ஏக்களின் உதவியுடன் 3 வது நபராக பிரமோத் திவாரி வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பாஜக சார்பில் 2 வேட்பாளர்கள்
அதேநேரத்தில் பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதன்மூலம் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கன்ஷியாம் திவாரியின் வெற்றி உறுதியாகும். அதன்பிறகு 30 எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் உபரியாக இருக்கும். இதோடு பிற கட்சி மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு இன்னொரு ராஜ்யசபா எம்பி பதவியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜக ஆதரவுடன் ஊடக நிறுவனங்கள் நடத்தி வரும் சுபாஷ் சந்திரா களமிறங்கி உள்ளார்.

அச்சத்தில் காங்கிரஸ்
இந்நிலையில் தான் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயற்சிக்கலாம் என காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ரெசார்ட்டுக்கு அழைப்பு
மேலும் ராஜ்யசபா தேர்தலுக்கு முன்பே எம்எல்ஏக்களை ரெசார்ட்டுக்கு அழைத்து செல்ல காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி உதய்ப்பூருக்கு வரும்படி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் சார்பில் மே 13 முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் சிந்தனையாளர் மாநாடு நடந்த ரெசார்ட்டில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட உள்ளனர். காங்கிரஸ் மற்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிக்கிறது. இதனால் எம்எல்ஏக்களை ரெசார்ட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம். இன்று ஒரு பகுதியினர் ரெசார்ட் செல்லும் நிலையில் மற்ற எம்எல்ஏக்கள் நாளை ரெசார்ட்க்கு வர உள்ளனர் என ஆளும் காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேவையில்லாத குற்றச்சாட்டு
இதற்கு பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.," அசோக் கொலாட் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அசோக் கெலாட் குதிரை பேரம் மட்டுமல்ல யானை பேரத்திலும் ஈடுபட்டவர். எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைக்கும் நிலையில் அவர்களின் செலவை ஏற்பது யார்?. இதன்மூலம் மக்கள் வரிப்பணம் வீணாகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications