நேரம் வந்துவிட்டது.. அடுத்து மோடியின் குஜராத் தான் டார்கெட்.... ராகேஷ் டிக்கைட் அதிரடி பேச்சு
காந்திநகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகக் குஜராத்தில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் விரைவில் அங்கும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறியுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் நான்கு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கப்பட்ட போராட்டம், தற்போது வரை தொடர்கிறது.
மறுபுறம் விவசாயிகள் சட்டம் குறித்தும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விவசாயச் சங்க தலைவர்கள் நாடு முழுவதும் கிசான் பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியில் பேசி வருகின்றனர்.
குஜராத்தில் பேரணி
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் விவசாயிகள் கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கலந்து கொண்டு பேசிய விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், குஜராத் மாநிலத்திலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை என்றார். விரைவில் குஜராத்திலும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் தலைநகர் காந்தி நகரை நோக்கி பேரணி நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்புகளை தாண்ட தயார்
தேவைப்பட்டால் தடுப்புகளைத் தாண்டி சென்றும் போராடத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். காந்தி நகரில் சாலை மறியல் போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, கடந்த ஜனவரி 27ஆம் தேதி குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்த டிராக்டர் பேரணியில் திடீரென்று வெளியாட்கள் புகுந்ததால் வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு அழுத்தம்
தொடர்ந்து பேசிய அவர், குஜராத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக எவ்வித போராட்டங்களும் நடைபெறாமல் இருப்பதாலேயே இங்குள்ள விவசாயிகள் கஷ்டப்படுவதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றம் விவசாயிகள் ஆதரவாக இருப்பதில்லை. குஜராத் விவசாயிகள் சிலரது அழுத்தம் காரணமாக தாங்கள் மகிழ்ச்சியாகவும் லாபத்தை ஈட்டுவதாகவும் பொய் கூறுகின்றனர். அப்படி இங்கிருக்கும் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டினால், அந்த டெக்னிக்கை எங்களுக்கும் சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
போராடத் தயாராக இருங்கள்
குஜராத் விவசாயிகள் ஒரு கிலோ உருளைக் கிழங்குகளை மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ராகேஷ் டிக்கைட், இதற்கு பொயர் தான் மகிழ்ச்சியா என்றும் கேள்வி எழுப்பினார். குஜராத் விவசாயிகளின் மனதில் இருக்கும் அச்சத்தை போக்கவே இங்கு வந்திருப்பதாகவும் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.