ராம் ரஹீமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை- ஹரியானாவில் வெடித்தது வன்முறை.. கார்களுக்கு தீ வைப்பு
சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுத் சாமியார் ராம் ரஹீமின் ஆதரவு குண்டர்கள் பஞ்சாப், ஹரியானாவில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஹரியானா மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
சாமியார் ராம் ரஹீம் தனது பெண் பக்கதர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராம் ரஹீமின் ஆதரவாளர்கள், ஹரியானா மாநிலத்தில் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 25ம் தேதி நடந்த கலவரத்தில், 31 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், ராம் ரஹீம் அனுபவிக்க வேண்டிய தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாத அவர்களின் ஆதரவாளர்கள் ஹரியானாவில் ஆங்காங்கே வன்முறை வெறியாட்டம் போட்டு வருகின்றனர். சிர்சா நகரிலும் ராம் ரஹீம் ஆதரவாளர்கள் 2 கார்களுக்குத் தீவைத்து கொளுத்தினர்.
இதனால் இன்று எங்கெங்கே கலவர பூமியாக மாறுமோ என்ற பீதியில் வடமாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தாலும் பதற்றம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.