40 முறை ரஞ்சி கோப்பை சாம்பியனான மும்பையை வீழ்த்தி சரித்திரம் படைத்த காஷ்மீர் அணி!
மும்பை: மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியை ஜம்மு காஷ்மீர் அணி வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளது. அதுவும் வரலாறு காணாத வெள்ளத்தால் வீரர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் அணி வரலாறு படைத்திருப்பது அம்மாநிலத்தை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஏ பிரிவு ரஞ்சி கோப்பை போட்டியில் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 236 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 254 ரன்கள் எடுத்தது.
2-வது இன்னிங்ஸில் சூர்யகுமார் 115 ரன்கள் குவிக்க மும்பை அணி 254 ரன்களை எட்டியது. இதனால் வெல்வதற்கு 237 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கியது ஜம்மு காஷ்மீர் அணி.
அபார வெற்றியை ருசித்த காஷ்மீர்
மும்பை அணியை மிரட்டும் வகையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் என்ற இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது ஜம்மு காஷ்மீர் அணி.
40 முறை சாம்பியனை வீழ்த்தி சரித்திரம்
80 ஆண்டுகால ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரு அணிகளும் மோதின. 40 ஆண்டுகாலமாக ரஞ்சி கோப்பை சாம்பியனாக திகழ்ந்த மும்பையை முதல் போட்டியிலேயே பர்வேஸ் ரசூல் தலைமையிலான ஜம்மு அணி வீழ்த்தி மும்பையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வெள்ளத்தால் பாதித்தும் சாதனை!
ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்ட போது இந்த அணியின் முன்னணி வீரர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இந்த அணியின் நட்சத்திர வீரர் ஷுபம் கஜூரியா உணவு, குடிநீரின்றி வீட்டில் பல நாட்கள் முடங்கியிருந்தார். அவர்தான் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 107 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 78 ரன்களையும் எடுத்து வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
பதில் கொடுத்துவிட்டோம்..
இந்த சரித்திர சாதனை குறித்து பர்வேஸ் ரசூல் கூறுகையில், மும்பையை மும்பை மண்ணில் வென்றது மகத்தானதுதான். ஷுபம் கஜூரியா அபாரமாக பேட்டிங் செய்தார். அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் ராம் தயாள், உமர் நசீர் ஆகியோரும் அபாரமாக வீசினர். பெரிய அணிகளுக்கு நிகராக நாங்கள் விளையாட முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இன்று அதற்கு விடையளித்து விட்டோம் என்றார்.
சரித்திரம்தான்!