ரிலையன்ஸ் வசமானது 'சிஎன்என்-ஐபிஎன்' சேனல்- ராஜ்தீப் சர்தேசாய் ராஜினாமா
மும்பை: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி மற்றும் அதைச்சார்ந்த குழும சேனல்கள், வெப்சைட்டுகளை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.4,000 கோடி அளித்து வாங்குகிறது. இந்திய மீடியா உலகின் மிகப்பெரிய பரிமாற்றம் இது என்று வர்ணிக்கப்படுகிறது.
நெட்வொர்க்-18 என்ற பெயரின் கீழ் சிஎன்என்-ஐபிஎன், ஐபிஎன்7, லோக்மாத், சிஎன்பிசி-டிவி18 ஆகிய செய்தி சேனல்களும் கலர் என்ற ஹிந்தி பொழுதுபோக்கு சேனலும் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுமத்தின் 78 சதவீத பங்குகளை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. மேலும் டிவி18 குழுமத்தின் 9 சதவீத பங்குகளும் ரிலையன்ஸ் வசம் வர உள்ளன.
நெட்வொர்க்-18ன் நிறுவனர் மற்றும் எடிட்டர் ராகவ்பால் இந்த நிறுவனத்துடனான தனது தொடர்பை ஜூலை துவக்கத்துடன் முடித்துக்கொள்ள உள்ளார். அதன்பிறகு ரிலையன்ஸ் முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும்.
இதன்காரணமாக செய்தி சேனல்களில் பணியாற்றும் ஆசிரியர் குழுவின் சீனியர்கள் வேறு சேனல்களுக்கு, அல்லது ஊடகங்களுக்கு செல்ல தயாராகிவருவதாக கூறப்படுகிறது.
இதில் எடிட்டர்-இன்-சீப் ராஜ்தீப் தேசாயும் அடக்கம். இவருடன் இவரது மனைவியும் இந்தத் தொலைக்காட்சியின் முக்கிய சீனியர் ஆசிரியருமான சகரிகா கோஷும் ராஜினாமா செய்ய உள்ளார்.
இந்திய மீடியா உலகின் மிகப்பெரிய கைமாற்றம் இதுவாகும். இந்த வர்த்தக மதிப்பு ரூ.4,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்படும் இடிவி சேனல்களையும் ரிலையன்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.