4 ஆண்டுகளுக்கு முன் கர்ப்பையை நீக்கி விட்டு கத்தரியை உள்ளே வைத்த மருத்துவர்கள்...
மங்களூர்: கர்ப்பப்பையை அகற்ற நடந்த அறுவைச் சிகிச்சையின் போது தவறுதலாக பெண்ணின் வயிற்றுக்குள் வைக்கப்பட்ட கத்திரிக்கோலை, 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 3 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர் மங்களூர் மருத்துவர்கள்.
மங்களூர் அருகே உள்ள மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹப்சா(வயது 42). இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது கர்ப்பப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக வீடு திரும்பிய ஹப்சா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டும் ஹப்சாவின் வயிற்று வலி குணமாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது வயிற்று வலி தொடர்பாக மங்களூரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் ஹப்சா. அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹப்சாவின் உறவினர்கள் அவர் முதலில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கத்ரி போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் ஹப்சாவின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்டு கத்திரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தைத்த டாக்டர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹப்சாவின் வயிற்றுக்குள் இருக்கும் கத்திரிக்கோலை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை நடத்தப் பட்டது. சுமார் 3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் ஹப்சாவின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை வெற்றிகரமாக அகற்றினார்கள்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘ஹப்சாவின் வயிற்றுக்குள் கடந்த 4 ஆண்டுகளாக கத்திரிக்கோல் இருந்ததால் அந்த கத்திரிக்கோல் துருப்பிடித்து இருந்தது. இதனால் அவருடைய சிறுகுடல், பெருகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் தொடர்ந்து 15 முதல் 20 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கத்ரி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதால், ஹப்சாவின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை அகற்றும் அறுவை சிகிச்சையை போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் ஹப்சாவின் உறவினர்கள் போலீசாரிடம் ‘ஹப்சாவின் வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து தைத்த டாக்டர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் விரைவில் அந்த மருத்துவமனை முன்பு மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்'. என எச்சரித்துள்ளனர்.