முத்திரை தாளுக்கு தடை நீக்கம்: மேலும் பல தெல்கிகளை உருவாக்கப்போகிறதா கர்நாடகா?
டெல்லி: முத்திரைத்தாள் விற்பனைக்கு மீண்டும் அனுமதியளிக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருவது ஆபத்தில் சென்று முடியும் என்றுஎச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
2003ம் ஆண்டில் இந்தியா அதற்கு முன்பு பார்த்திராத மிகப்பெரிய ஊழல் ஒன்றை சந்தித்தது. 3 இடங்களில் நடத்தப்பட்ட அதிகாரிகளின் சோதனையில், ரூ.2200 கோடி, ரூ.900 கோடி, ரூ.216 கோடி மதிப்புள்ள போலி முத்திரை தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்போதுதான். இதன் பின்னணியில் இருந்த கிரிமினல்தான் அப்துல் கரிம் தெல்கி.
முத்திரைத்தாள்களுக்கு தடை
தற்போது தெல்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகாவில் முத்திரைத்தாள் விற்பனையை மாநில அரசு அதிரடியாக தடை செய்தது. முத்திரைத்தாள்களை முற்றிலுமாக தடை செய்வதன் மூலம் போலி முத்திரை தாள் புழக்கத்தை அடியோடு நிறுத்தலாம் என்பது கர்நாடக அரசின் நிலைப்பாடாக இருந்தது.
வங்கிகள் கேட்கின்றனவே
இந்நிலையில்தான் கர்நாடக ஹைகோர்ட்டில் சமூக சேவகர் எஸ்.வி.தேசாய் ஒரு மனு தாக்கல் செய்து, முத்திரைதாள் மீதான தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கர்நாடக அரசு முத்திரைத்தாள்களுக்கு தடை விதித்திருந்தாலும், எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் அனைத்தும், வருவாய் ஸ்டாம்புகளை சில வகை உபயோகத்திற்காக கேட்கின்றன. எனவே கள்ளச்சந்தையில் ஸ்டாம்புகளை வாங்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வாங்கிவரப்படும் இந்த ஸ்டாம்புகளின் விலையை பல மடங்கு அதிகரித்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கர்நாடக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி கேட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவும், முத்திரைத்தாள் விற்பனைக்கான தடையை நீக்க ஆலோசிக்க தொடங்கியுள்ளது.
கள்ளமார்க்கெட்டில் ஸ்டாம்புகள் விற்பனை
வருவாய் ஸ்டாம்புகளை வங்கிகள் கேட்பதால் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகிவருவது உண்மைதான். ஐந்து ரூபாய் ஸ்டாம்பை ரூ.50க்கு விற்பனை செய்கின்றனர் கள்ள மார்க்கெட்டில். நகர்ப்புறங்களில் சான்றிதழை பரிசோதித்து ஸ்டாம்பு தருவதற்காக பிரான்கிங் மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிராமங்களில் அதுவும் கிடையாது என்பதால் கள்ள மார்க்கெட் பலே ஜோராக நடந்து வருகிறது. நகரங்களிலும் கூட தேவைக்கு ஏற்ற வகையில் மெஷின்கள் இல்லை. எனவே நீண்ட கியூவில் பல மணி நேரம் காத்திருப்பதற்கு பதிலாக அதிக பணம் கொடுத்து கள்ள மார்க்கெட்டில் ஸ்டாம்புகளை வாங்கவே மக்கள் விரும்புகிறார்கள்.
மற்றொருவகையில் மோசடி
இந்நிலையில் கர்நாடக அரசு தற்போது முத்திரைதாள் மீதான தடையை நீக்க முற்பட்டுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்பு புழங்கிய அளவுக்கு இப்போது போலி முத்திரைத்தாள், ஸ்டாம்புகள் புழங்காமல் இருக்கலாம். ஆனால் இன்னும் சந்தையில் தெல்கி தாக்கம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. இப்போது கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு நல்ல ஸ்டாம்புகளை விற்பனை செய்பவர்கள், அரசின் தடை நீக்கத்தை தொடர்ந்து தாங்களாகவே போலி ஸ்டாம்புகளை தயாரிக்கவும் வாய்ப்புள்ளது. தெல்கியும் இப்படித்தான் செய்தார்.
போலியை எப்படி வரையறுப்பீர்கள்
வருவாய் ஸ்டாம்புகளை வாங்க அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டுள்ளது. வக்கீல்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதிக அளவில் இவற்றை வாங்கியபடி உள்ளனர். எனவே, எது போலி ஸ்டாம்பு, எது அசல் என்று வரையறுத்து கூறுவது கர்நாடக அரசுக்கு கஷ்டமான காரியமாகவே இருக்கும்.
கள்ள நோட்டுக்கு எதிரான அறிவிப்பு
கள்ள ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்தபோது, மத்திய அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. குறிப்பிட்ட சீரியல் எண்கள் கொண்ட ரூபாய் நோட்டுக்களை யாரும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஏனெனில் அந்த சீரியல் எண்ணை நோட்டுகளில் அரசு பிரிண்ட் செய்த காலகட்டத்தில்தான், அதிகப்படியான கள்ள நோட்டுகளும் தயாரிக்கப்பட்டன. எனவே குறிப்பிட்ட சீரியல் எண்ணை தவிர்க்குமாறு அரசு தெரிவித்தால், உண்மையான நோட்டுகளும் செல்லுபடியாகாது என்பதே உண்மை. இருந்தும், அந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.