தமிழக ஆளுநர் ரோசய்யா பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு
டெல்லி: ஆளுநர்கள் பதவி விலக மத்திய அரசு நெருக்கடி அளித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை தமிழக ஆளுநர் ரோசய்யா இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் குறிப்பிட்ட சிலரை நீக்கி விட்டு, அந்த பதவிகளில் பாஜக மூத்த தலைவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, அந்த கவர்னர்கள் பதவி விலக நெருக்கடி அளிக்கப்பட்டது.
மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, சம்பந்தப்பட்ட கவர்னர்களை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசி, பதவி விலகுமாறு கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, உத்தரபிரதேச ஆளுநர் பி.எல்.ஜோஷி, சத்தீஷ்கர் மாநில ஆளுநர் சேகர் தத், நாகாலாந்து மாநில ஆளுநர் அஷ்வனி குமார் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர். இந்நிலையில் ஊழல் புகாரில் சிக்கிய, மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழ்நிலையில் டெல்லியில் இன்று நரேந்திரமோடியை, ரோசய்யா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் பரத்வாஜ் ஓய்வு பெற்ற நிலையில், அவரது பொறுப்பையும் தற்போது ரோசய்யாவிடம் ஜனாதிபதி அளித்துள்ளார். இந்நிலையில் மோடி மற்றும் ரோசய்யா நடுவேயான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நரேந்திர மோடி மற்றும் ரோசய்யா நடுவேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டுள்ளது.