"8 + 4 + 3"... ஆர்.எஸ்.எஸ். உதவியுடன் கல்வி முறையை மாற்றியமைக்கும் பாஜக அரசு!
டெல்லி: நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையை அப்படியே ஒட்டுமொத்தமாக மாற்றப் போகிறதாம் மத்திய அரசு. மேலும் தற்போது மாநில அரசுகளின் கையில் உள்ள கல்வியையும், மத்திய அரசு கையகப்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமலாக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது நாடு முழுவதும் 10 + 2 + 3 என்று கல்வி முறை உள்ளது. அதாவது பத்தாவது படித்து விட்டு அடுத்து பிளஸ்டூ ( சில மாநிலங்களில் இது பியூசி என்று உள்ளது), பிறகு 3 ஆண்டு இளநிலைக் கல்விப் படிப்பு என்ற நடைமுறை உள்ளது.
இதை அப்படியே மாற்றி 8வது வகுப்பு படித்து விட்டு அடுத்து உயர் நிலைக் பள்ளிக் கல்வியை 4 ஆண்டுகளாக மாற்றி, அதன் பின்னர் 3 ஆண்டு இளநிலைக் கல்லூரிக் கல்வி என்ற புதிய கல்விமுறையை அமல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதாம்.
இந்த புதிய திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான பிஎஸ்எம் என்ற அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாம். இதை அப்படியே ஏற்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் சித்தாந்த ஆலோசகராக, குருவாக, வழிகாட்டியாக திகழ்வது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி மற்றும் கட்சி தொடர்பான முக்கிய முடிவுகளை ஆர்எஸ்ஐஎஸைக் கேட்காமல் பாஜக எதுவும் செய்வதில்லை - அப்படியெல்லாம் இல்லை என்று அது மறுத்தாலும் கூட. இந்த நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நடைமுறையை ஆர்எஸ்எஸ் உதவியுடன் மாற்றியமைக்கப் போகிறது பாஜக.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஆர்எஸ்எஸ் களம் இறங்கியுள்ளது. பல்வேறு அறிவுரைகளை, யோசனைகளை, பரிந்துரைகளை அது மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த பாரதிய சிக்ஷான் மன்டல் (பி.எஸ்.எம்) என்ற கல்வி அமைப்புதான் இந்த பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரையானது, இந்திய கல்வி முறையை முற்றிலும் இந்திய மயமாக்க உதவும் என்பது பி.எஸ்.எம்மின் கருத்தாகும்.
நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிஎஸ்எம், இதுதொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஒரு சர்வதேச மாநாட்டையும் கூட்டியுள்ளது. வலுவான நாட்டுக்குத் தேவையான கல்விக் கொள்கை என்பது இந்த மாநாட்டின் தலைப்பாகம்.
இந்த மாநாட்டின்போது புதிய கல்வித் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள 10 + 2 + 3 என்ற கல்வித் திட்டத்தை மாற்றி, 8 + 4 + 3 என்று மாற்ற வேண்டும் என்பது பிஎஸ்எம்மின் முக்கியப் பரிந்துரையாகும். தற்போது நடைமுறையில் உள்ள திட்டமானது கடந்த 1968ம் ஆண்டு கோத்தாரி கமிஷன் பரிந்துரைத்ததாகும்.
பிஎஸ்எம் யோசனைப்படி பொதுக் கல்வியானது 8 ஆண்டுகளாக இருக்கும். இதில் முதல் மொழியாக தாய் மொழி (தமிழ்நாட்டில் தமிழ்) இருக்கும். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை கூடுதல் மொழிகளாக இருக்கும். மேலும் கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற் பயிற்சிக் கல்வி, பணி மற்றும் தூய்மை, தார்மீகக் கல்வி, சமூக சேவை ஆகியவை பிற பாடங்களாக இருக்குமாம்.
இந்த எட்டாம் வகுப்புக் கல்வியுடன் படிப்பை விட விரும்புவோர் அதை விட்டு விட்டு அரசு நடத்தி வரும் ஐடிஐயில் இணைந்து தொழிற் கல்வியை 18 மாதங்கள் படித்தும், கூடுதலாக 6 மாத செயல் முறைப் பயிற்சியையும் பெற்று பணியாற்ற ஆரம்பிக்கலாம்.
அப்படி இல்லாதவர்கள் 4 ஆண்டு உயர் நிலைக் கல்வியை பள்ளியில் தொடரலாம்.
இந்த 4 ஆண்டு படிப்பையும் கூட முழுமையாக படிக்கத் தேவையில்லை. பாதியிலேயே நிறுத்திக் கொள்ளலாம்.
அதன்படி 4 ஆண்டு படிப்பின்போது முதலாவது ஆண்டு முடிவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். 2வது ஆண்டை முடிக்கும்போது டிப்ளமோ தரப்படும். 3வது ஆண்டை முடிக்கும்போது டிகிரி வழங்கப்படும். 4வது ஆண்டின்போது ஹானர்ஸ் டிகிரி அளிக்கப்படும்.
மேலும் 9ம் வகுப்பின்போதே மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடத்தையும் தேர்வு செய்யவும் இந்த புதிய பாடத் திட்டம் வகை செய்கிறதாம்.