கிறிஸ்தவர்களுக்கான தனி அமைப்பை உருவாக்குகிறது ஆர்எஸ்எஸ்?
டெல்லி: இந்துத்துவா இயக்கமான ஆர்எஸ்எஸ், கிறிஸ்தவர்கள் பிரிவை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துத்துவா இயக்கமாக இருந்தபோதும் கிறிஸ்தவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் "Rashtirya Isai Manch" என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறது. இதன் ஒருகட்டமாக டெல்லியில் கடந்த டிசம்பர் 17-ந் தேதியன்று நாடு முழுவதும் 12 மாநிலங்களைச் சேர்ந்த சில ஆர்ச்பிஷப்புகள், ரெவெரெண்ட் பிஷப்புகளுடனான சந்திப்புக்கு ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த சந்திப்பில் "‘Rashtirya Isai Manch" என்ற பிரிவை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த முயற்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இது குறித்து கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாதிரியார் பால் தெலகட் கூறுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த முயற்சியை வரவேற்கிறோம் என்றார்.
ஆனால் கிறிஸ்தவர் சார்பு இணையதளங்கள், சமூக வலைதளங்களில் இது ஒரு அரசியல் சூழ்ச்சி என விமர்சிக்கப்படுகிறது.
டெல்லியில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களை சமாதானப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.