குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? ஆர்.டி.ஐ-யில் கேள்வி எழுப்பிய பக்தர்
திருப்பதி ஏழுமலை வெங்கேடச பெருமாள், குபேரனிடம் பெற்ற கடன் எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டு உள்ளது? இன்னும் எத்தனை ஆண்டுகளில் இந்த கடன் நிறைவடையும்?' என்று பெங்களூருவை சேர்ந்த பக்தர், நரசிம்ம மூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக்கு, ஆண்டு தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள், பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

குபேரனுக்கு வட்டி
இந்த உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது.இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. எனினும், இந்த வருவாய் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.

புராண கதை
இதன்பின்னால் ஒரு புராண கதை உள்ளது. பிருகு முனிவர் தனது பதியான நாராயணரை மித்ததையும், அந்த கால்களை நாராயணர் பிடித்து விட்டதையும் பார்த்து கோபமுற்ற லட்சுமிதேவி பூலோகம் வந்து விட்டார். இங்கு ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற திருப்பெயருடன் அவதரித்தார். வைகுண்டத்தில் லட்சுமிதேவி இல்லாததால் அவரை கரம் பிடிக்க ஸ்ரீநிவாசனாக பூலோகத்தில் அவதரித்தார் நாராயணர்.

பத்மாவதியை மணக்க கடன்
லட்சுமிதேவி உடனில்லாததால் நாராயணரிடம் செல்வம் இல்லை. எனவே, பத்மாவதியை மணப்பதற்காக, குபேரனிடம் கடன் பெற்றார்.கலியுகம் முடியும் வரை, தான் பெற்ற கடனுக்கு, வட்டி செலுத்துவதாகவும், வாக்களித்தார். அதன்படியே, பக்தர்களின் காணிக்கை அனைத்தும், ஏழுமலையானின் கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

தேவஸ்தான போர்டிடம் கேள்வி
இதற்கிடையே, கோவிலுக்கு கிடைக்கும் வருவாய் அனைத்தையும், கடனுக்கான வட்டியாக செலுத்துவதாகக் கூறி, தேவஸ்தானம் போர்டு கூறுவதற்கு ஆதாரம் வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி கேட்டுள்ளார். ஆந்திர மாநில தகவல் ஆணையத்திடம், அவர் அளித்துள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பத்தில், 'ஏழுமலையான் பெற்ற கடன் தொகை எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது? இந்தக் கடன் எப்போது முடியும்?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.

பணத்துக்கு கணக்கு காட்டுங்கள்
இந்த விண்ணப்பத்தை, ஆந்திர மாநில தகவல் ஆணையம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து நரசிம்ம மூர்த்தி கூறுகையில், குபேரனிடம் பெருமாள் பெற்ற கடன் எப்போது முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைக்கு, தேவஸ்தான நிர்வாகிகள் தகுந்த கணக்கு தரவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications