சபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி
மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று மாலை முதல் இணையதளத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய நினைக்கும் பக்தர்கள் இன்று மாலை முதல் கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளிக்கவும் தீபாராதனை காட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக ஒரு மண்டல காலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் தை முதல்நாள் மகர விளக்கு தரிசனம் வரையிலும் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதுவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது. மண்டல பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை கடந்த 26ஆம் தேதி தேதி அடைக்கப்பட்டது.
கோவில் நடை திறப்பு
ஜனவரி மாதம் நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. 31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஆன்லைனில் முன்பதிவு
சபரிமலை செல்ல விரும்பும் பக்தர்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் இன்று மாலை முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதால் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஐயப்பன் திருவாபரணங்கள்
மகரவிளக்கு பூஜை நேரத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருவாபரண பெட்டி ஊர்வலத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை
திருவாபரண பெட்டி ஊர்வலம் இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. கடந்த ஆண்டு களை போன்று இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இல்லை என்று தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியுள்ளார். ஊர்வலத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார் வாசு. திருவாபரண பெட்டியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தீபாராதனைக்கு அனுமதியில்லை
ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக எடுத்திருக்க வேண்டும். திருவாபரண பெட்டிக்கு வழக்கமாக பல இடங்களில் வரவேற்பு கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு எந்த இடத்திலும் வரவேற்பு அளிக்கக்கூடாது. மேலும் தீபாராதனையும் காட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரண பெட்டி ஊர்வலம் நேராக பம்பைக்கு செல்லும். வேறு எங்கும் தங்காது.
ஆர்.டி.பி.சி.ஆர். கட்டாய பரிசோதனை
மகர விளக்கு பூஜை முடிந்து திருவாபரணப் பெட்டி திரும்பி வரும்போது பெரு நாடு காக்காடு கோயக்கல் கோவிலில் மட்டும் தீபாராதனை காட்டப்படும். டிசம்பர் 31ஆம் தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பரிசோதனைக்கு பின் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்படும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள்.