சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு மிரட்டல்... சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்கக் கோரி பொதுநலன் வழக்கை தொடர்ந்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாம் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரரான இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நவுஷத் அகமது கான் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் பொதுநலன் வழக்கைத் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏன் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழையக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும் சபரிமலை அனைவருக்கும் பொதுவான கோவில். இங்கு வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்திலும் இடமில்லை. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற மரபு கடந்த 1,500 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தது.
நாடு முழுவதும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் பொதுநலன் வழக்கை தொடுத்த இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் நவுஷத் அகமது கான், வழக்கை திரும்ப பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்த வழக்கை தாக்கல் செய்ததது முதல் தனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருகிறது; அமெரிக்காவில் இருந்து பலரும் மிரட்டுகின்றனர் என்றும் அவர் முறையிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர், ஒரு பொது நலன் வழக்கு தொடர்பபட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதை திரும்ப பெற முடியாது என்றனர். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக தேவைப்பட்டால் ஓர் ஆலோசகர் நியமிக்கப்படுவார். பெண்களுக்குரிய உரிமை குறித்த இந்த வழக்கை திடீரென்று திரும்ப பெற முடியாது என்றனர்.