இது என்ன தொலைக்காட்சி தொடரா? ராஜ்ய சபா தேர்தல்.. சுயேச்சை எம்பியை சீண்டும் சச்சின் பைலட்
ஜெய்ப்பூர்: அரசியல் என்பது சினிமாவை உருவாக்குவது போல் அல்ல என்பதால் போட்டியில் இருந்து விலகுவது நல்லது என மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவுக்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் அறிவுரை கூறியுள்ளார்.
வரும் ஜூன் 10ஆம் தேதியன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திடீரென சுயேட்சை வேட்பாளராக ஊடக நிறுவன உரிமையாளராக எஸ்செல் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திரா களமிறக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் முன்னிலையில்.. ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்!
வேட்பாளர்கள் யார்?
காங்கிரஸ் கட்சி சார்பாப ரந்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பாஜக சார்பாக கன்சியாம் திவாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏ-க்களும், பாஜகவுக்கு 71 எம்எல்ஏ-க்களும் உள்ளனர்.
எத்தனை வேட்பாளர்களின் வெற்றி உறுதி?
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 2 பேரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு ஒருவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது வேட்பாளரின் வெற்றிக்கு 15 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருந்தது. அதற்கும் சுயேட்சைகள், கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கும் சூழல் இருப்பதால், பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரே வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே குதிரை பேரம் நடக்காமல் இருக்க எம்எல்ஏ-க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுபாஷ் சந்திராவின் பேச்சு
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏ-க்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று கூறி சுபாஷ் சந்திரா பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சச்சின் பைலட்டை அவமானம் செய்தார். இதனால் அவரை பழிவாங்க இது சரியான வாய்ப்பு. ராஜஸ்தான் அரசால் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு நேர்ந்த அவமானத்தால் எனக்கு வாக்களிப்பார்கள் என்று சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.
சச்சின் பைலட் அறிவுரை
சுபாஷ் சந்திரா குறித்து கூறிய சச்சின் பைலட், மாநிலங்களவை தேர்தலில் இருந்து அவர் வெளியேறுவது நல்லது. ஏனென்றால் அவமானப்படுவதை விடவும் பணிவாக வெளியேறலாம். அரசியல் ஒன்றும் தொலைக்காட்சி தொடரல்ல. அங்கு யார் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது போல் நீங்கள் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.