ஷீரடி முழுவதும் பந்த்.. கடைகள் அடைப்பு.. ஆனா சாய்பாபா கோயில் திறப்பு.. அலைமோதும் பக்தர்கள்
புனே: சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்தை தொடர்ந்து ஷீரடி முழுவதும் பந்த் போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. எனினும் சாய்பாபா கோயில் திறந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் சாய்பாபாவுக்கு பெரிய கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மாநிலத்தின் பிரபல ஆன்மீகத் தலமாகவும் ஷீரடி மாறியுள்ளது. இந்த இடத்தில் சாய்பாபா அதிக நாட்கள் வாழ்ந்ததால் அவர் அங்கு பிறந்திருக்கலாம் என பலரால் நம்பப்படுகிறது.
பொங்கல் விடுமுறை முடிந்தது... சென்னைக்கு படையெடுத்த மக்கள்
பாத்ரீ
இந்த நிலையில் சாய்பாபாவின் பிறந்த ஊர் பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரீ என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கோயில் நிர்வாகம்
பாத்ரீயில் சாய்பாபா கோயில் அமைக்கப்படும் என கூறியிருப்பதால் ஷீரடிக்கு வரும பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால் இன்று முதல் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்ததாக கூறப்பட்டது.
பக்தர்கள் குழப்பம்
இதைத் தொடர்ந்து ஷீரடி கோயில் இன்று முதல் மூடப்படுவதாக கூறியது வதந்தி. கோயில் திறந்திருக்கும் என கோயில் அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்திருந்தார். எனினும் இன்று முதல் ஷீரடி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் குழப்பமடைந்தனர்.
கோயிலில் உணவு
இந்த நிலையில ஷீரடியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் கோயில் திறந்துள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலில் உணவு, தண்ணீர் வழங்கப்படுவதால் பக்தர்களுக்கு எந்த சிரமும் இருக்காது என கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
உத்தவ் தாக்கரே தனது கருத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையை சுமூகப்படுத்த நாளை ஷீரடியில் உள்ள மக்கள், முக்கிய தலைவர்களுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.