புனே மத்திய சிறையில் இருந்து விடுதலையானார் நடிகர் சஞ்சய்தத்: மும்பைக்கு தனி விமானத்தில் பயணம்
புனே: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி புனே எரவாடா மத்திய சிறையில் இருந்த நடிகர் சஞ்சய் தத் இன்று விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய் தத் விடுதலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம்தேதி தடா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. 6 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டதை அடுத்து சஞ்சய்தத் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவும் தாக்கல் செய்தார். ஒன்றரை ஆண்டுகள் ஜெயிலில் இருந்த பின்பு சஞ்சய்தத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில் அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி அவரது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி உத்தரவிட்டது.
இருமுறை பரோல்
இதனையடுத்து சரணடைந்த சஞ்சய் தத் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சஞ்சய் தத் சிறையில் தண்டனை அனுபவித்த போது 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது, பின்னர் 30 நாட்கள் வழங்கப்பட்டது. மனைவி, மகளுக்கு ஆபரேசன் என்று காரணம் கூறி பரோலில் வெளியில் வந்தார்.
நன்னடத்தையால் விடுதலை
இந்நிலையில், சிறையில் சஞ்சய் தத்தின் நன்னடத்தையைக் காரணம் காட்டி, தண்டனைக் காலம் நிறைவடைவதற்கு இன்னமும் 8 மாதங்களும், 16 நாள்களும் மீதமுள்ள நிலையில், அவர் இன்று காலை (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலைக்கு எதிர்ப்பு
இந்நிலையில் சஞ்சய் தத் விடுதலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. புனே எரவாடா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர் பேசுகையில் "சிறையில் பலர் அடைக்கப்பட்டு உள்ளனர், ஆனால் சஞ்சய் தத் மட்டும் மற்றவர்களை போன்று நடத்தாதது ஏன்?" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.
உற்சாக வரவேற்பு
சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து இயக்குனர் ஹிரானி மற்றும் சஞ்சய் தத் குடும்பத்தினர் சிறைக்கு சென்று சஞ்சய் தத்தை அழைத்து வந்தனர். பலத்த பாதுகாப்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் தத், பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்த போதும் ஏதும் பேசாமல், காரில் ஏறி விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.
ரசிகர்கள் காத்திருப்பு
போலீசாரின் அறிவுரையை ஏற்று தனி விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டார் சஞ்சய்தத். இதற்கிடையே சஞ்சய்தத்தை வரவேற்க, அவரது ரசிகர்கள் பேனர்களை வைத்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைக்கு எதிராக வழக்கு
இந்த நிலையில் சஞ்சய் தத் விடுதலையை எதிர்த்து பிரதீப் பலேக்கர் என்ற சமூக ஆர்வலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், சஞ்சய் தத்தை விடுதலை செய்யும் அரசின் முடிவை ரத்து செய்துவிட்டு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அவரது சிறை தண்டனையை முழுவதையும் அனுபவிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் விசாரணை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு அளிப்பது தவறானது. சட்டவிரோதமானது. அவருக்கு மன்னிப்பு மற்றும் தண்டனையை குறைக்கும் அளவுக்கு அவரது நன்னடத்தை என்று எது கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது? ஜெயிலில், குறிப்பாக சிறிய வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் நிலை என்ன? அவர்களும் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனாலும், அதில் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மனுதாரரின் வக்கீல் நிதின் சத்புதே தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் முடிவு
ஜெயில் விதிப்படி கைதிகளின் நன்னடத்தையை காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. சஞ்சய்தத் ஜெயிலில் இருந்த போதும், பரோலில் விடுதலையான போதும் நன்னடத்தையுடன் நடந்து கொண்டார் என்பதால் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மகராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.