1989ல் ஜெயலலிதாவே இப்படித்தான்.. சசிகலாவுக்காக ஜெயலலிதாவை விட்டுக்கொடுத்த தம்பிதுரை
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து, இரட்டை இலையை முடக்க கோரிய பன்னீர்செல்வம் கோஷ்டி கோரிக்கையை புறக்கணிக்க கோரிக்கைவிடுக்க சசிகலா கோஷ்டியை சேர்ந்தவரும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை மற்றும் அணியினர் டெல்லி சென்றுள்ளனர்.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் தம்பிதுரை கூறியதாவது: சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளோம். அதற்கான அத்தாட்சிகளை தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளோம். இப்போது திடீரென செல்லாது என கோரிக்கைவிடுப்பது சரியில்லை.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்க யார் கையெழுத்திட்டனரோ அவர்களே இப்போது, எதிர்த்து பேசுவதை பார்க்கும்போது அவர்களை வேறு ஏதோ சக்தி இயக்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதாவே அப்படித்தான்
1989ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா, அதிமுக பொதுக்குழுவால்தான் கட்சி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகுதான் எல்லா உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் ஆனார். ஆனால், அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள்.
சாட்சியம் இருக்கு
ஜெயலலிதா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கான சாட்சியங்களை தேர்தல் கமிஷனிடம் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதிமுகவில் எந்த பிளவும் கிடையாது. ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக கூறும் கருத்துக்களை ஏற்க கூடாது. ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட கோரிக்கைகளை ஏற்க கூடாது என்பதே தேர்தல் கமிஷனிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கை.
முடக்க முடியாது
இரட்டை இலையை முடக்கவோ, உரிமை கொண்டாடவோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது. பொதுச்செயலாளர் தேர்வு என்பது பிரச்சினையே கிடையாது என்பதே எங்கள் வாதம்.
சசிகலாதான்
பொதுக்குழுவால் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சசிகலா. அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். பட்ஜெட், ஆர்.கே.நகர் தேர்தல் விவகாரங்கள் காரணமாகவே தேர்தல் தள்ளிப்போயுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.