ஜெ. மட்டுமல்ல சசிகலா, இளவரசி, சுதாகரனும் விடுதலை- அபராதங்களும் ரத்து!
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோடு சேர்த்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் விடுதலையாகியுள்ளனர்.
ஜெயலலிதா விடுதலை என்றுதான் இன்று அத்தனை பேராலும் பேசப்படுகிறது. அத்தனை பேரும் அவருடன் சேர்த்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டனர்.
ஜெயலலிதாவைப் போலவே இந்த நான்கு பேர் மீதான கீழ்க் கோர்ட்டு தீர்ப்புகளையும் நீதிபதி குமாரசாமி ரத்து செய்துள்ளார். இவர்களது தரப்பு வாதங்களையும் அவர் முழுமையாக ஏற்று விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதையடுத்து இந்த நான்கு பேரும் ஜெயலலிதாவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களுக்கும் ஜெயலலிதாவோடு சேர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. அதையடுத்து இவர்களும் ஜெயலலிதாவுடன் சேர்ந்து விடுதலையாகி வெளியே வந்தனர். தற்போது வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளனர்.