பெங்களூரு சிறையில் செம டோஸ் விட்ட சசிகலா- அதிர்ச்சியில் உறைந்த தினகரன்
திவாகரனுடன் மல்லுக்கட்டும் தினகரனை கடுமையாக கண்டித்தாராம் சசிகலா.
Recommended Video
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசும் வழக்கமுள்ள தினகரன், சசிகலாவுடனான சந்திப்புக்குப் பிறகு மீடியாக்களை சந்திக்காமல் கிளம்பிவிட்டார். ' வழக்கத்துக்கு மாறான கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ' எடப்பாடியோடு திவாகரன் போனால், போகட்டும். உன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்' என தினகரனுக்கு அவர் அறிவுறுத்தியிருக்கிறார்' என்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.
மன்னார்குடி குடும்பங்களுக்குள், யார் பெரியவர் என்ற கோஷ்டி மோதல் வலுத்துள்ளது. தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிய திவாகரன், மன்னார்குடியில் அம்மா அணி அலுவலகத்தைத் திறந்தார்.
அ.ம.மு.க அணியின் முக்கிய நிர்வாகிகளையும் தன்பக்கம் இழுக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். ராமநாதபுரம் முன்னாள் எம்.பி ராஜேஸ்வரன், திவாகரன் அணியில் இணைந்தார்.
இதற்கு முன்னதாக, மதுரை மேலூரில் தினகரன் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றவர் ராஜேஸ்வரன். ' உண்மையான அ.தி.மு.க என்பது திவாகரன் அணிதான்' என நேற்று பேட்டியளித்தார்.
இதனையடுத்து, மேலும் சில முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் இழுக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். அதேநேரம், தினகரனின் செயல்பாடுகளைப் பற்றியும் சசிகலா கவனத்துக்குக் கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டார். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அந்தளவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் தீவிர கண்காணிப்பைப் செலுத்தி வருகிறார் டி.டி.வி. இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் தினகரன்.
குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களால், மிகுந்த மனவேதனையில் இருக்கிறார் சசிகலா. இந்த சந்திப்பில் தினகரனுக்குப் பல விஷயங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். டி.டி.வியிடம் பேசிய சசிகலா, ' குடும்பத்தை மைனஸ் என வெளியில் பேசிக் கொண்டு இருக்கிறதைக் கேள்விப்பட்டேன். நாளைக்கு என்னையும் மைனஸ் என சொல்வதற்கு எவ்வளவு நாள் ஆகும்? கட்சிக்குள் நீ மீண்டும் வந்ததற்கும் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதற்கும் நான்தான் காரணம். அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள் என நினைத்தேன். எடப்பாடி பழனிசாமியோடு திவாகரன் போனால் போகட்டும். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் என்ன முடிவு எடுக்கிறோமோ, அதைப் பொறுத்துத்தான் நமது எதிர்காலம் இருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் என வலுவான கூட்டணியை அமைத்தால்தான், நமக்கும் சில இடங்கள் கிடைக்கும். அதைவைத்துக் கொண்டே மத்திய அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சர் வரையில் கிடைப்பதற்குப் பேசலாம். அதைவிட்டுவிட்டு தனியாகப் போட்டியிடுகிறேன் எனக் கிளம்பினால், ஒரு எம்.பிகூட நமக்குக் கிடைக்காது. இதைப் புரிந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும். குடும்பத்தைப் பற்றித் தேவையில்லாமல் பேசி, பொதுமக்கள் மத்தியில் கவனத்தை சிதற வைக்க வேண்டாம்' எனக் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். திவாகரன் பற்றிப் புகார் வாசிக்கத்தான் இந்த சந்திப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் தினகரன். அதற்கு சசிகலா இடம் கொடுக்கவில்லை.
அ.ம.மு.கவின் அடுத்தகட்ட பயணம் பற்றித்தான் விரிவாகப் பேசினார் சசிகலா. சில இடங்களில் அவர் தினகரனைக் கண்டித்திருக்கிறார். இந்தக் கோபத்தில்தான் மீடியாக்களை சந்திக்காமல் வெளியேறினார் டி.டி.வி" என்றார் விரிவாக.