தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான மனு: விசாரணை நவ.21-க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு 69% இட ஒதுக்கீடு கொள்கையை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.
இதற்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த சாகித்யா, கணபதி நாராயணன் ஆகிய இரு மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சில தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி வாதாடினார்.
அப்போது விஜயன், உயர் கல்வியில் 50% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் கிடைத்தன. ஆனால், அதில், 40 இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களை (மனுதாரர்கள்) நிகழ் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆட்சேபம் தெரிவித்து, மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு படிப்பு செப்டம்பரில் தொடங்கி விட்டது. பாதிக்கப்பட்ட இரு மாணவர்களில் ஒருவர் மட்டுமே போதுமான கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார். எனவே, அவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றார்.
இதைத் கேட்ட நீதிபதிகள், "நிகழ் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களை நிகழ் கல்வியாண்டிலேயே சேர்க்க அனுமதிக்க வாய்ப்புகள் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு வழக்கறிஞர் விஜயன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர்களின் சேர்க்கை தொடர்பாக முடிவெடுப்பதில் காலம் தாழ்த்தினால், இரு மாணவர்களும் நிகழாண்டில் கல்வி பெறாமல் பாதிக்கப்படுவர். முந்தைய விசாரணையின் போது இவர்களின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரு மாணவர்களும் போதுமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே, நிகழ் கல்வியாண்டிலேயே அவர்களை சேர்த்துக் கொள்ள சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாணவர்களும், தமிழக அரசு தரப்பும் இந்த விவகாரம் தொடர்புடைய ஆவணங்களைத் தாக்கல் செய்து வாதத்தை முன்வைக்க அனுமதிக்கிறோம். இந்த மனு மீதான அடுத்த விசாரணை நவம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.