ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் விதித்த கடும் நிபந்தனைகள்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் கடுமை காட்டியும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அளித்த உறுதி மொழியை மட்டும் நம்பி ஜாமீன் வழங்கியுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்து ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவ உள்ளிட்டோரின் 4 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18.12.2014 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
- ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.
- கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 18.12.2014க்குள் மேல்முறையீட்டு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அது 35,000 பக்கமோ 40,000 பக்கமோ தாக்கல் செய்தாக வேண்டும்.
- 18.12.2014ம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது.
- மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.
- இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
- நீதிபதி குன்ஹா கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது. நீதிபதி குன்ஹா மட்டுமல்ல நானும் (தத்து) ஒரு கன்னடர்தான்.
- நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ எந்த ஒரு விமர்சனத்தையும் அதிமுகவினர் முன்வைக்கக் கூடாது.
- தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் சகிக்க முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.
- இதற்கு மேலும் நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
- அப்படி விமர்சனங்களை முன்வைப்பது அல்லது வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
- பாலி நாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications