மவுலிவாக்கம் கட்டிட விபத்து: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீர்நிலைகள் உள்ள பகுதியில் விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த ஜுன் மாதம் 28-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் உள்பட 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீ பெரும்புதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமர்த்தி, ராஜாராமன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இந்த கட்டிட விபத்து குறித்து பொதுநல வழக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்பிடிப்பு பகுதிகளில் விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.