உள்ளாட்சி தேர்தல்: திமுக வழக்கு அக்.18க்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைப்பு
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்த கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில் இந்த வழக்கை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சீட்டு மூலம் ஓட்டுப் போடுவதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து இடங்களிலும் மின்னணு எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தல்களில் மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு வரையறை செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராவதற்கு தமிழக அரசு சார்பில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆகியோரும் வந்திருந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியைப் பார்த்து, நீங்கள் யாருக்காக வந்திருக்கிறீர்கள்?' என்றார். அதற்கு அவர், நான் தமிழக அரசு சார்பில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
அப்போது, வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி பேச முற்பட்டபோது, நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று தெரியும். அனைத்து இடங்களிலும் மின்னணு எந்திரம் பயன்படுத்த வேண்டும். மறுவரையறை செய்யப்பட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதுவரை தேர்தலுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்கிறீர்கள். அதனால், இதில் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அக்டோபர் 18ஆம்தேதி விசாரிப்பதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகியிருந்தார். தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் ஆளும்கட்சியின் அரசியல் லாபங்களுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது. கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் எதனையும் பின்பற்றவில்லை.
2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் படிதான் இந்த உள்ளாட்சி தொகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு நடந்தது அதன் படி மறு சீரமைப்புக்குள்ளான தொகுதிகளின் அடிப்படையில்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வாதிட்டார் துஷ்யந்த் தவே.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரிமா சுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. ஆகவே இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வருகிற 18ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.