ஆதார் தேவையா தேவையில்லையா? வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது!
டெல்லி: அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்க அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ‘ஆதார்' என்ற பெயரில் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஆதார் அட்டை பெற்று இருந்தால்தான் அரசின் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும் என்று மத்திய அரசின் நிறுவனங்கள் தெரிவித்து வந்தன.
ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
ஆதார் அட்டைக்காக குடிமக்களின் கைரேகை, கண்ணின் மணியை பதிவு செய்வது போன்றவை தனிநபர் உரிமையை மீறும் செயல் என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதி ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். அவர், ‘‘இந்த வழக்கு விவகாரம் விரிவான விவாதத்துக்கு உரியது. அந்தரங்க உரிமை அடிப்படை உரிமையா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு சீரற்ற முடிவுகள் ஏற்பட்டிருப்பதால், அதிகார பிரகடனம் தேவைப்படுகிறது. எனவே 2 அல்லது 3 நீதிபதிகள் அமர்வு இதை முடிவு செய்ய முடியாது. இதை கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்,'' என கூறினார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்க அரசியல் சாசன அமர்வினை அமைப்பதற்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்துக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டனர்.